Thursday 13 December 2012

இலுப்பை மரம்

கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய வன்மையான மரம். சாறு, பால் தன்மை கொண்டது. இருப்பை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. விதையிலிருந்து எடுக்கக் கூடிய திருவிளக்கெரிக்கப் பயன்படும் எண்ணெய்க்காக திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது. இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; பசிமிகுக்கும், நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.

 இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது.

இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது.

இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு.


 குன்றா விலுப்பையின்பூ கூர்மதுரம் வாசனையாத்
தின்றாற் பயித்தியமுஞ் சேருங்காண்-மன்றலுறுத்
தார்குழலே பித்தசுரம் தாகந் தணிந்துவிடும்
வார்தயக்க மெய்தும் விழுத்து

- அகத்தியர் குணபாடம்

பொருள் - தீச்சுரம், நீர்வேட்கை நீங்கும். பித்த சுரம் நீங்கும்.

பால் சுரக்க

தாய்ப்பால் சரிவர சுரக்காத பெண்கள் பலவகையான மருந்து மாத்திரைகளை உட் கொள்வார்கள்.  இவை சில சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணும்.  

இந்த இன்னலைப் போக்க இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

பூ

“ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை” என்பது பழமொழி. 

இலுப்பைப் பூ இனிப்புச் சுவையுடையது.    இலுப்பைப் பூவை பாகாக்கி, சர்க்கரைக்குப் பதிலாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளதை இப்பழமொழி மூலம் அறியலாம்.

இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.  இதனால் இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.  இரத்தச்சோகை மாறும். 

இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், வெப்பத்தினால் உண்டான சுரம் நீங்கும்.

தீரா தாகம், நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் நீங்கும்.

இலுப்பைப்பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தினால் இளைப்பு நீங்கும்.

காய்ந்த இலுப்பைப்பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு வந்தால்  வீக்கம் மறையும்.

இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.

இலுப்பைக் காய்
 இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும்.  அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால்  வெண்படலம் விரைவில் குணமாகும்.

இலுப்பைப் பழம்

இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது.  மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.

விதை
இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும்.


 
நெய்(எண்ணெய்)-பிண்ணாக்கு

இலுப்பையின் விதையில் எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வன்மையும் வனப்பையும் கொடுக்கும்.


எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும்.  இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும்.  பழங் காலங்களில் இதனையே நம் முன்னோர்கள் பலர் சோப்பிற்குப் பதிலாக உபயோகித்து வந்துள்ளனர்.

கரப்பா னடருங் கடிசிரங்கு புண்ணும்

உரப்பா மிடுப்புவலி யோடுங் -கரப்பான்
பாகுமொழி மாதே பலமுண்டாந் துற்பலம்
ஏதகுமி லுப்பையி னெய்க்கே
-அகத்தியர் குணவாகடம்

பொருள் - இடுப்பு வலியைப் போக்கும், உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  ஆனால் கரப்பானை உண்டுபண்ணும் தன்மை கொண்டது.

வேர்


இலுப்பையின் வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்கவைத்து குடிநீராக அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

No comments:

Post a Comment