Friday, 11 January 2013

Wednesday, 9 January 2013

வாழைக்காய் வாய்வு

சிறு வயதில் எனக்கு  மிகவும் பிடித்தது வாழைக்காய் பொரியல்,கூட்டு,சிப்ஸ் எல்லாம். முப்பத்தி ஐந்து வயது வரை எந்த பிரச்சனையும் இல்லை.அதன் பிறகு ரத்தக் கொதிப்பு,அல்சர், பிறகு சர்க்கரை என எல்லாம் வந்து ஒட்டிக்கொண்டன.உணவுக் கட்டுப்பாடு என்று சிலவற்றை ஒதுக்க வேண்டி வந்தது. அதில் இந்த வாழைக்காயும் ஒன்று. அது வாய்வு என்று சொல்லி எனக்கு கொடுக்க மாட்டார்கள். எப்பொழுதாவது சாப்பிட்டால் அது வயிற்றிலோ அல்லது மார்பிலோ வாயு தங்கிக்கொண்டு பலவித உபாதைகள் கொடுக்கும்.நெஞ்சுவலி வந்து மரண பயம் உண்டாக்கும். எங்கே செத்துப் போய்விடுவோமோ என்ற பயம் வேறு வந்துவாட்டும்.
பிறகு என்ன வாயு நிவாரண மருந்துகள் பயன் படுத்தி சரி செய்வதற்குள் அப்பாடா என்று ஆகிவிடும்.

சில ஆண்டுகளுக்கு முன்திருமந்திரம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்வரும் மந்திரம் எனக்கு புதிய சிந்தனையைக் கொடுத்தது

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி மாதரோடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தது ஒழிந்தாரே---திருமூலர்


அப்புறம் என்ன எல்லாவற்றையும் மறந்து வாழைக்காய்  மீண்டும் விருப்ப உணவாக ஆகிவிட்டது..வாயுவும் இல்லை வயிற்று வலியும் இல்லை.

Tuesday, 8 January 2013

சீப்பு

1966 ம் ஆண்டு நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது எப்பொழுதும் பாக்கெட்  ல் சீப்பு வைத்துக் கொண்டு இருப்பேன்.அடிக்கடி தலை வாரிக் கொள்ளும் பழக்கம் இருந்தது எனக்கு.வீட்டுக்கு அருகில் உள்ள நூலகத்துக்கு சென்று கதைப் புத்தகங்கள் படிப்பேன். ஒரு நாள் நூலகர் என்னிடம், இன்னும் எத்தனை நாளுக்கு சீப்பு வைத்து தலை சீவுவ?
என்று என்னிடம் கேட்டார். நான் சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் வந்து விட்டேன்.
ஒரு மாதம் கழித்து என் தாயார் அகால மரணம் அடைந்து நான் மொட்டை அடிக்கவேண்டியது ஆகிவிட்டது.சீப்பு வைத்ததனால்தான் அம்மா இறந்து விட்டாரோ என்று நினைத்தேன். இனிமேல் சீப்பு வைக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அப்படி சீப்பு வைத்தால் தந்தைக்கு  ஏதாவது நேர்ந்து விடுமோ என்று கலங்கினேன்.

 1993      ம் ஆண்டு தந்தை இறந்து விட்டார்.அதன் பிறகும்  நான் சீப்பு வைக்கவில்லை ,தலையில் முடியும் இல்லை. அதன் பிறகு என் சகோதரிகள் ,சகோதரர்கள் அனைவருமே  இறந்து விட்டனர்.
  வாழ்க்கை நிலையாமை பற்றி புரிந்து கொள்ள இந்த திருமந்திரம் பற்றி சிந்திக்கலாம்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே----திரு மூலர்



Sunday, 6 January 2013

பப்பாளிப் பழம்

ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடித்தால், மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையே வராது. இதற்கு, நாம் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

உதாரணத்துக்கு எளிதில் நமக்கு கிடைக்கும் பப்பாளிப் பழத்தையே எடுத்துக் கொள்வோம்.
பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்த்துக்கள் உள்ளன.

ஆராய்ச்சியில் பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் .

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து.

இந்தப் பழத்தில்தான் எத்தனையெத்தனை சத்துகள், வெவ்வேறு விதமான மருத்துவ குணங்கள்...

சுமார் 30 கிராம் அளவிலான பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வாமாயின், அதில் வைட்டமின் பி 1- 11 மில்லிகிராம்; பி2 - 72 மில்லி கிராம்; வைட்டமின் சி - 13 மில்லி கிராம்; இரும்புச் சத்து - 0.1 மில்லி கிராம்; சுண்ணாம்புச் சத்து - 0.3 மில்லி கிராம் இருப்பதைக் காணலாம்.

விலைமதிப்புடைய ஆப்பிளைக் காட்டிலும் பப்பாளியில் அதிக அளவிலான உயிர்சத்துக்கள் (வைட்டமின்) இருக்கிறது என்பதால், இப்பழத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

இதிலுள்ள மருத்துவ குணங்களைக் காண்போமானால், மேலும் வியப்பு உண்டாகும் என்பது தெளிவு.

இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் பப்பாளி பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும் வல்லமையும் இப்பழத்துக்கு உள்ளது.

உடலுக்கு ஆரோக்கியத்தை நல்கி, சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு வழிவகை செய்யும் பப்பாளி பழத்தை, நாம் அன்றாடம் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.

பப்பாளி எல்லா சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய பழப்பயிர். தானாகவே வளரக்கூடியது, மிக குறைவான கவனிப்பே போதுமானது இந்த மரம். ஆனால் அது தரும் பலனோ மிக அதிகம். ஆனாலும் நோயாளிகளைப் பார்க்க செல்பவர்கள் கூட ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற விலை அதிகமான, பப்பாளியை விட சத்துக்குறைவான கனிகளைத்தான் வாங்கி செல்கிறார்களே தவிர, பப்பாளியைக் கவனிப்பாரில்லை.

பப்பாளி பனைபோல பருத்து உயர்ந்து வளர்ந்தாலும் முருங்கையைப் போலவே பலமற்ற மரம் இது. எளிதில் முறிந்துவிடும் தன்மைகொண்ட இம்மரமானது, சரியான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது.

ஆசிய நாடுகளில் சுமார் 10லட்சம் டன்கள் பப்பாளி உற்பத்தி செய்கின்றன. இதில் இந்தியாவில் பப்பாளி பழங்கள் 3 லட்சத்தி 70 ஆயிரம் டன் உற்பத்தி செய்கிறார்கள்.
பப்பாளி பழத்தின் விதைகள் மற்றும் தோலை நீக்கிய பின் மற்ற பழங்களை விட அதிக அளவு (75௮0 சதவீதம்) வீணாகாமல் உண்ணத்தக்கதாக உள்ளது. ஆனால் இதை நீண்டநாள் பாதுகாத்து பயன்படுத்த முடியாது.

100கிராம் பப்பாளிப் பழத்தில் 57மி.கிராம் வைட்டமின் சி உள்ளது. 100 கி ராம் பப்பாளிப்பழத்தில் வெறும் 32கிலோ கலோரி ஆற்றலே கிடைக்கிறது. எனவே இது குண்டானவர்களும், எடையை குறைக்க விரும்புபவர்களும் விரும்பும் பழமாக குணநலன்களைப் பெற்றுள்ளதுஆப்பிள், கொய்யா, சீத்தாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவு கரோட்டின் சத்து உடையது பப்பாளி பழம் ஆகும்.
பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பொதுவாக இந்திய குழந்தைகளிடையே காணப்படும் வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறுகளைத் தடுக்கமுடியும்.

பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள "பப்பாயின்" என்ற என்சைம் ஆனது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயலாற்றுகிறது. இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளிதில் செரிக்க உதவுகிறது. எனவேதான் இறைச்சியை மென்மையாக வேகவைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.

இந்த பப்பாயினின் வலி நீக்கும் தன்மையானது அமெரிக்க உணவு மற்றும் வேளாண்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதுகெலும்புதட்டு புறந்தள்ளல் போன்ற நோய்நிலைகளில் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்தானது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலியைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. கோதுமை புரதத்தை எளிதில் செரிக்கச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குடல்புண்ணால் அவதிப்படுவோருக்கும் பப்பாயின் பயன்படுகிறது.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை (டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்றுநோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது. ஆப்பிரிக்காவில் பப்பாளி வேரானது கிரந்தி எனும் பால்வினை நோயை (சிபிலிஸ்) குணப்படுத்தவும், இலையானது இழுப்பு (ஆஸ்துமா) நோயின்போது புகைபிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவைச்சோந்த மக்கள் பப்பாளி (வாத) நோயிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர். கியூபாவில் பப்பாளிப் பாலானது (சோரியாஸிஸ்) காளாஞ்சகப்படை மற்றும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பப்பாயின் குடலில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்கவும், பூச்சிகளை அழிக்கவும் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.