Showing posts with label தணிகை மலை. Show all posts
Showing posts with label தணிகை மலை. Show all posts

Saturday, 9 May 2015

தணிகை மலை

தணிகை மலை
1999 ம் ஆண்டு  தணிகை மலை  என்ற சிவ பக்தர் எனக்கு அறிமுகம் ஆனார். அவரும் ஒரு அரசுப்பணியாளர்தான். காவி வேட்டி,கதர் சட்டை, கழுத்தில் உருத்திராட்சை கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை,கால்களில்  செருப்பு இல்லாமல் இருப்பார். அவர் முழுநேர  சிவத்தொண்டு புரிவார். அன்னதானம் ஏற்பாடு செய்தல் ,சிவ பிரசங்கங்கள் செய்தல் ஆகியவை  அவரது தொண்டு.
உடல் நலக் குறைவு காரணமாக  நான் நொந்து பொய் இருந்தேன். சாப்பிட்ட மருந்துகளால்  எனக்கு பயன் கிட்டவில்லை.  எங்கள் மருத்துவர்  கடைசியாக என்னிடம்  நீங்கள்  தியானம் கற்றுக் கொள்வது நல்லது என்று எனக்கு அறிவுறுத்தினார்.

தியானம்  எங்கு கற்றுக் கொள்வது  என்பது தெரியாமல் இருந்த எனக்கு  நண்பர் தணிகைமலை அவர்கள்  வேதாத்திரி மகரிஷி குறித்தும் மனவளக் கலை மன்றம் குறித்தும் விவரித்தார்.  நான் வசித்த சைதாப்பேட்டை பகுதியில்  உள்ள மனவளக் கலை மன்றத்தின் முகவரியையும்  பெற்றுத்தந்தார். நன் அங்கு சென்று முறைப்படி உடற்பயிற்சி மற்றும் தியானமுறைகளைக் கற்றுக்கொண்டேன். ஆறு மாதங்களில்  எனக்கு இருந்த உடல்நல க் குறைவு சரியானது. நான் முன்புபோல் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டேன். நான் என்றென்றும் தணிகை மலைக்கு விசுவாசமாக இருக்கிறேன்.

சிலகாலம் அவரை நான் சந்திக்கவில்லை . 2007 ல் ஒருநாள் அவரை எழும்பூர் ரயில்வே  ஸ்டேசனில் வைத்துப் பார்த்தேன். முழு சபாரியுடன் வெற்று நெற்றியுடன், கழுத்தில் கொட்டை இன்றி, கால்களில் ஷூக்களுடன் நின்று கொண்டிருந்தார். என்னைப்பார்த்தும் பாராததுபோல் யாருடனோ  பேசிக்கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் யாவும்  முற்றிலும் மாறு பட்டு இருந்தன. அவருடைய மாற்றத்துக்கு என்ன காரணம் என்றும் விளங்கவில்லை. நான் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னை இதுவரை பார்த்ததே இல்லை என்ற  வகையில் முகத்தை வைத்திருந்தார். நானும் அவரிடம் எதுவும் பேசாமல்  அகன்று விட்டேன். வாழ்க வளமுடன்